தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பி வரும் 3 குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் அல்லது அதனை இணையதளத்தில் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்வதும் குற்றம் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி எம்.ரவி புதிய தலைமுறைக்கு தெரிவித்திருந்தார். மேலும், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரித்திருந்தார். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்பவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் 3 குழுக்கள் குழந்தைகளின் ஆபாச படங்களை சேமித்து வைத்து பரப்பி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக ஏ.டி.ஜி.பி ரவி தகவல் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பொதுமக்களின் செல்போன் மற்றும் இணைய பயன்பாட்டை கண்காணிக்கவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போனில் பார்த்ததாக இளைஞரை காவலர் ஒருவர் மிரட்டுவது போன்று சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோ போலியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.