தமிழ்நாடு

'ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதம்' : வெளிமாநில உதவியை நாட முடிவு

webteam

கஜா புயலால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சேதம் அடைந்திருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து மின் கம்பங்களை வாங்க மின்வாரியம் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்.

’கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,தஞ்சை, கடலூர், உள்ளிட்ட கடமாலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசு தரப்பில் இருந்து பெரும்பாலும் நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர்.  

’கஜா’ புயலால் பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர். கஜா புயல் சேதத்தால் மின் துறைக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.நகர்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களுக்கு மின் இணைப்பு தர விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.மேலும் கஜா புயலால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சேதம் அடைந்திருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து மின் கம்பங்களை வாங்க மின்வாரியம் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே கஜா புயல் சேதம் குறித்து முதற்கட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் முழுவதுமாக சேத மதிப்பீடு கண்டறிந்த பின்பே மத்திய அரசுக்கு அதனை அனுப்பி நிவாரணம் பெற முடியும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.