தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் இரண்டு குழுக்களை அமைத்து
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வெளி மாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இந்த குழுக்கள் உதவும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கவும் இக்குழுக்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் என
எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்கப்படும் என
முதல்வர் தெரிவித்துள்ளார். இக்குழுவில் மருத்துவ வல்லுநர்கள், வேளாண்மை மற்றும் மீன்வளத்துறையைச் சார்ந்த முகவர்கள், அரசுசாரா
அமைப்பினர், நுகர்வோர் பிரதிநிகள் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வருகின்ற இரண்டு மாதங்களில் குழந்தையை பெற்றெடுக்கவுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் தாய்மார்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் உடல்நிலை
கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 102 மற்றும் 104 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை
கர்ப்பிணி பெண்கள் பெற்றுக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மீன் அங்காடி, இறைச்சி மற்றும் காய்கறிக் கடைகளில் சமூக
விலகல் கடைபிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.