கொரோனா வைரஸ் எதிரொலியாக சட்டப்பேரவை வரும் எம்.எல்.ஏக்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு சானிடேஷன் செய்வதற்காக மருத்துவ குழுவை தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ஆம் தேதி தொடங்கியது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், 4 நாட்கள் விவாதம் நடந்து முடிந்ததை தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாவது அமர்வு கூடுகிறது. முன்னாள் அமைச்சர் க.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
ஏப்ரல் 7-ஆம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடரின்போது துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது. மார்ச் 12 ஆம் தேதி பள்ளிக்கல்வி, உயர் கல்வித்துறை மீதும், மார்ச் 13-ஆம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கைள் மீதும் விவாதம் நடைபெறுகிறது. மார்ச் 16ஆம் தேதி உள்ளாட்சித்துறை மீதும், 27ஆம் தேதி காவல்துறை மானியக்கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் எதிரொலியாக சட்டப்பேரவை வரும் எம்.எல்.ஏக்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு சானிடேஷன்(கிருமிநாசினி) செய்வதற்காக மருத்துவ குழுவை தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சட்டப்பேரவை வாயிலில் செவிலியர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.