மகப்பேறு நிதியுதவி திட்டம்
மகப்பேறு நிதியுதவி திட்டம் கோப்புப் படம்
தமிழ்நாடு

மகப்பேறு நிதியுதவி திட்டம் இனி 3 தவணைகளில் வழங்கப்படும்! முழு விவரம் இதோ...!

ஜெனிட்டா ரோஸ்லின், ஜெ.நிவேதா

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநரகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்று நேற்று நடைபெற்றது. அதில், டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதுப்பித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் இனி 3 தவணைகளில் ரூ.14,000 ரொக்கப் பணம் மற்றும் ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்” என்று தெரிவித்தாா்.

இத்திட்டம் இதற்கு முன் எத்தனை தவணைகளில் கொடுக்கப்பட்டது, இனி எப்படி கொடுக்கப்படும் என்பதையும் அமைச்சர் மா.சுப்பிரமணியனே விளக்கியுள்ளார். அவர் கூறியவற்றின் அடிப்படையில் விளக்கத்தை பார்ப்போம்...

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடந்த 2006 ஆம் ஆண்டு பெண்களுக்காக கொண்டுவரப்பட்டது, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம். கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கவும், பேருகால உதவியாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் முதலில் (2006-ல்) ரூ. 6,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டது. பின்னர் அடுத்தகட்டமாக (2011 -12ல்) இது உயர்த்தப்பட்டு ரூ. 12,000 வழங்கப்பட்டது.

அதேசமயம் மத்திய அரசின் கர்ப்பிணிகளுக்கான திட்டமான மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டமும் செயல்பட்டது.

இதனால் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தையும் மாநில அரசின் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே திட்டமாக உருவெடுத்து ‘இனி மாநில அரசு 15,000 ரூபாயும் மத்திய அரசு 3000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கும்’ என முடிவுசெய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தம் ரூ.18,000 என உதவித்தொகை உயர்த்தப்பட்டு, முதல் இரண்டு கர்ப்பதத்திற்கு அது வழங்கப்பட்டது. இன்றுவரை இந்த தொகைதான் தொடர்கிறது. இத்தொகை ஐந்து தவணைகளாக வழங்கப்படுவது வழக்கம்.

மகப்பேறு நிதியுதவி திட்டம்

ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.

இதுவரை அமலில் உள்ள ரூ. 18,000 ஐந்து தவணைகளாக பிரித்து வழங்கப்படும் நடைமுறை...

கருத்தரித்த 3, 4 ஆம் மாதங்களில் தலா ரூ.2000 (மொத்தம் ரூ.4,000); குழந்தை பிறந்தவுடனும், 3 மாதம் கழித்தும் ரூ 4,000 (மொத்தம் ரூ.8,000); மேலும் 9 மாதங்கள் கழித்து ரூ 2000 தரப்படும். இப்படி மொத்தம் 14,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

மீதமுள்ள ரூ. 4,000 ரொக்கமாக இல்லாமல் 2 ஊட்டச்சத்து பெட்டகங்களாக வழங்கப்படும். அதில் நெய், உலர் பேரிச்சம், இரும்புச்சத்து திரவியம், கர்ப்பிணி தாய்க்கான ஊட்டசத்து மாவு போன்றவை இருக்கும்.

மாற்றம்...

முன்பு உள்ளதுபோல இப்போதும் 4,000 ரூபாய் பெட்டகங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிடும். அதில் மாற்றமில்லை. மீதமுள்ள ரூ. 14,000 - 5 தவணையாக இல்லாமல் 3 தவணையாக கொடுக்கப்படும். எப்படியெனில்,

கர்ப்பம் தரித்த 4-வது மாதத்தில் ரூ 4000, குழந்தை பிறந்தவுடன் ரூ.4000, அதன் பிறகு 4 மாதம் கழித்து ரூ 6000 என்பது வழங்கப்படும்.

இப்படியாக இனி 3 மாத தவணையில் ரொக்க தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கென்று 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கிய 2006 முதல் இதுவரை 1.17 கோடி பேருக்கு ரூ.10,529.57 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.