தமிழ்நாடு

25 உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதி : தமிழக மாநில அரசு அறிவிப்பு

webteam

தமிழகத்திற்குப் பிற மாநிலங்களிலிருந்து 25 உள்நாட்டு விமானங்களைத் தினமும் இயக்கிக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் புதிய தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நாள்தோறும் 25 உள்நாட்டு விமானங்கள் வெளி மாநிலங்களிலிருந்த இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக பயணிகள் விமான போக்குவரத்து செயலர் பிரதீப் சிங் கரோலாவுக்குத் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

\

இதற்கிடையே உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்த வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதில் பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் இ-பாஸ் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதிக்கப்படும் என்றும், பயணிகள் தங்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல் கொடுக்கும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.