வேங்கைவயல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது அரசுத்தரப்பில், வேங்கை வயல் வழக்கில் 389 சாட்சிகளும், 196 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதேபோல 87 டவர் லொகேஷன்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் உள்ள புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதனடிப்படையில் 31 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் விசாரனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆகவே, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேங்கைவயல் வழக்கு குறித்த முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, "வேங்கை வயல் விவகாரத்தில் சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் கிடையாது. இருவருக்குள்ளே ஏற்பட்ட தனி மனித பிரச்சனையே இது போன்று நடக்கக் காரணம். கடந்த 2 வருடங்களாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து, விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் 3 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை பொறுத்தவரை சிபிசிஐடி போலீசார் மொத்தம் 389 சாட்சிகளிடம் விசாரனை மேற்கொண்டுள்ளனர். 196 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டன. 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்யப்பட்டு, புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் 31 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படம், வீடியோ ஆதாரங்கள், நிபுணர் குழுக்களால் மீட்கப்பட்டு அறிவியல் ஆய்வக அறிக்கைக்கு அனுப்பப்பட்டது. அதேபோல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படங்கள், அங்கிருந்து தொடர்பு கொண்ட செல்போன் எண்கள் என அனைத்தும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களால் மற்ற நபர்களிடம் பேசிய ஆடியோக்கள் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களிடம் குரல் மாதிரிகள் எடுக்கப்பட்டு அனைத்தும் அறிவியல் பூர்வமான ஆய்வகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் பேசிய நபர்களின் ஆடியோக்கள் அனைத்தும் உண்மையானது என உறுதி செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்ணீர் தொட்டிக்கு ஏறும் வரை அதில் எந்தவிதமான கழிவுகளும் கலக்கவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. சரியாக 07.35 மணிக்கு மேல் தான் கழிவு கலக்கப்பட்டுள்ளது. கழிவு கலக்கப்பட்ட தண்ணீர் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேரம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிந்து விசாரனை நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்" என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி வழக்கை உத்தரவுக்காக நீதிபதி ஒத்திவைத்தார்.