தமிழ்நாடு

வேலுமணி மீதான புகார் குறித்து விசாரணை - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Sinekadhara

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு எதிராக திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் முறைகேடு நடந்ததாகவும், அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் அளிக்கப்பட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அந்த வழக்கில் கூறப்பட்டது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வின்முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கணக்கு தணிக்கை அறிக்கையில் இழப்பு நடந்திருப்பதாக கூறப்பட்டிருப்பதால் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்கள்மீது விசாரணை நடத்தப்படும் என்றும், புகாரில் முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய திமுக, அறப்போர் இயக்க வழக்குகளை ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கு ஒத்திவைத்திருக்கின்றனர்.