பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிக்கு வராத நாட்களில் ஊதியம் தரக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு, புறம்போக்கு நிலங்களை பராமரிப்பதிலும் அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதிலும் விஏஓக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நிலம், வருவாய்த்துறை தொடர்பான ஆவணங்களை பராமரித்தல் நில அளவை மேற்கொள்ளுதல், பேரிடர் மீட்பு, பிறப்பு, இறப்பு, சாதி, வருவாய் மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ் வழங்குதல், ஊராட்சிகளுடன் இணைந்து இலவச திட்டங்களை மக்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விஏஓக்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பணியிடங்களை மறுசீரமைப்பு செய்வது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தத்தால் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே முன்னறிவிப்பு இன்றி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களின் பணிக்கு வராத நாட்களைக் கணக்கெடுத்து சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.