தமிழ்நாடு

இனி புதிய ஸ்டைலில் ரேஷன் கட்டிடம்.. தமிழக அரசு வெளியிட்ட மாதிரி வரைபடம்

Sinekadhara

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளை மேம்படுத்தி புதிய தோற்றத்துடன் கட்டடம் கட்ட முடிவுசெய்து அதற்கான மாதிரி கட்டட வரைபடத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமான நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பல கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்குவதால் சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும் எனவும், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் சொந்த கட்டடம் கட்ட படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புதிய பொலிவுடன் மாதிரி வரைப்படத்தில் இருப்பது போல் கட்டடம் கட்டப்படுவதோடு, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் அமைக்கப்படும் என உணவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.