தமிழ்நாடு

ஆளுநரின் முடிவு வெளிவரும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை - தமிழக அரசு

webteam

7.5%  உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு வெளிவரும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும், முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ இடங்களை வழங்குவதில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த மார்ச் மாதம் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதுடன், அதனடிப்படையில் அறிக்கையும் தாக்கல் செய்தது. அரசு இதற்கு ஒப்புதல் வழங்கி ஆளுநரின் இசைவுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

 இந்நிலையில் விரைவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக தெரிகிறது. ஆகவே, மருத்துவ இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான உள் ஒதுக்கீட்டு இட ஒதுக்கீடு தொடர்பான முடிவு எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாக அரசு நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவும், இந்த கல்வி ஆண்டிலேயே, மருத்துவ இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

 இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் அளித்த தமிழக அரசு, 7.5 % இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு வெளிவரும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.