தமிழ்நாடு

“தமிழக மீனவர்கள் தான் எல்லை தாண்டுகின்றனர்”- இந்திய கடலோர காவல்படை தகவல்

Rasus

தமிழக மீனவர்கள் தான் எல்லைதாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் குறித்து சர்வதேச நீதிமன்றத்தை அணுக மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மீனவர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்வு விசாரணைக்கு வந்தபோது, இந்திய கடலோர காவல்படையின் டி.ஐ.ஜி. டோனி மைக்கேல் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், தமிழக மீனவர்கள் தான் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மீனவர்களை தடுக்க முடியவில்லை எனவும், மீனவர்களின் படகுகள் இருப்பிடத்தை அறிந்து கொள்ள இஸ்ரோ கண்டுபிடித்த டிரன்ஸ்பாண்டர்கள் 786 மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கு தொடர்பாக ஆஜராகியிருந்த இஸ்ரோ அதிகாரிகள், டிரான்ஸ்பாண்டர்கள் குறித்து விளக்கம் அளித்து அதன் விலை 40 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த டிரான்ஸ்பாண்டர்களை மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.