இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் தமிழ்நாடு முதல்வர் விஜய், நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். நாளை மாலை 4.30 மணி அளவில், இச்சந்திப்பு நடைபெறும் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற தவெக தனிக்கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐஎம்யூஎல் உள்ளிட்ட ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. சட்டப்பேரவையில், அவ்வரசுக்குக் கிடைத்த நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு காங்கிரஸ், ஐஎம்யூஎல், விசிக உள்ளிட்ட ஆதரவுக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் தவெக இடம் கொடுத்துள்ளது.
முன்னதாக, தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய், பரஸ்பர நிமித்தமாக,பிற கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அந்த வகையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாமக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் தமிழ்நாடு முதல்வர் விஜய், நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். நாளை மாலை 4.30 மணி அளவில், இச்சந்திப்பு நடைபெறும் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் விஜய் சந்திக்கவுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரையும், அவர் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து மே 28ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை முதல்வர் விஜய் சந்திக்கவுள்ளார். அதேபோல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார்.