கடுமையான உள்கட்சிப் போட்டிக்குப் பிறகு வி.டி. சதீசன் முதல்வராக அறிவிக்கப்பட்டு, மே 18ம் தேதி பதவியேற்கிறார். இந்த விழாவிற்கு அண்டை மாநில முதல்வர்கள் உட்பட தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு அனுப்பப்பட்டதாக கூறப்படுவதால், அவரது வருகை குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே-4 ம் தேதி வெளியான நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்கொண்டிருக்கின்றன. தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து 2 வருடங்கள் 3 மாதங்களியே தமிழகத்தின் முதல்வர் நாற்காளியில் அமர்ந்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதேபோல, தொடர்ச்சியான 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சியை வீழ்த்தி பாஜக முதன்முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
இதற்கு சற்றும் குறையாத வகையில், கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசை 10 வருடங்களுக்குப் பிறகு, வீழ்த்தி காங்கிரஸின் ஐக்கிய முன்னணி வெற்றி வாகை சூடியிருக்கிறது. கேரளாவைப் பொறுத்தவரை ஆட்சியைப் பிடிப்பதற்கு பட்ட கஷ்டத்தை விட, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கே அதிக கஷ்டத்தை காங்கிரஸில் இருந்து பட்டது எனத் தோன்ற வைக்கும் வகையில், கடந்த 10 நாட்களாக இருந்த நீண்ட இழுபறிக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசன் ஒருவழியாக கேரளாவின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் தான், அவரின் பதவியேற்பு விழா மே-18ம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவிற்கு, முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அண்டை மாநில முதல்வர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களையும் விழாவில் பங்கேற்க அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவாகவே வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு முதல் கட்சியாக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்திருந்தது. தொடர்ந்து, முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். இந்நிலையில், கேரள முதல்வராக பதவியேற்கவுள்ள சதீசனின் பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.