தமிழகத்தில் வரும் 2018ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் மூன்றாவது தென்மண்டல மாநாடு சென்னையில் நடந்தது. இந்தவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தொழில் தொடங்க ஏற்கனவே உள்ள உகந்த சூழலை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களை ஒரே விண்ணப்பத்தின் மூலம் ஆன்லைனில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும். தமிழக அரசின் டிட்கோ உதவியுடன் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் சுமார் 267 ஏக்கர் பரப்பளவில் வான்வெளி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக விரைவில் புதிய வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை தொழில் கொள்கை வெளியிடப்படும். மேலும், தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மதுரை-தூத்துக்குடி தொழில் பெருவழிச் சாலை என்ற பெயரில் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கான நில எடுப்புப் பணி 2 மாவட்டங்களில் நிறைவுபெற்றுள்ளது. கடந்த மே 2011 முதல் மே 2017 வரை தமிழகம் ஈர்த்த மொத்த அன்னிய நேரடி முதலீடு 1,25,970 கோடி ரூபாய் ஆகும்.
கடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், கையொப்பமிடப்பட்ட ரூ.2 இலட்சத்து 42 ஆயிரம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், ரூ.62 ஆயிரத்து 738 கோடி மதிப்பிலான 61 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன. இதன் மூலம் 76 ஆயிரத்து 777 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.