தமிழ்நாடு

''எனது கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி'' - ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த முதலமைச்சர்

webteam

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனால் ஊரடங்கு விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஒரு வகையில் கொரோனா பரவல் ஓரளவு தடுக்கப்பட்டாலும், இதனால் ஆதரவற்றோர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விருதுநகரில் பட்டாசு தொழிலாளர்கள் போதிய உணவின்றி, ஒருவேளை மட்டுமே உணவு  உண்டு வரும் நிலை குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவை புதிய தலைமுறை செய்தியாளர் ரமேஷ், முதலமைச்சர் பழனிசாமிக்கு டேக் செய்து பதிவிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர், அவர்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பகிரவும் .இதை எனது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ட்விட்டரிலேயே பதிலளித்த முதல்வருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள தொழிலாளர்களின் நிலையையும் கண்காணித்து உதவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீப நாட்களாக ட்விட்டர் மூலம் பலரின் கோரிக்கைகளை முதலமைச்சர் பழனிசாமி நிவர்த்தி செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தன் தாய்க்கு மருத்துவ உதவிகள் வேண்டுமென்று பதிவிட்டிருந்தார். அதற்கும் உடனடியாக முதலமைச்சர் பதிலளித்து உதவிகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.