சிறுசேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பொதுமக்கள் பயனடைய வேண்டுமென முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக சிக்கன நாளையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தங்களது கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை, சிறுசேமிப்புக்கு உகந்த அமைப்பான அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார். அந்த தொகை சிறுதுளி பெருவெள்ளமெனப் பெருகி, அவசர காலங்களில் ஏற்படும் ஏதிர்பாராச் செலவுகளை எதிர்கொள்ள பெரிதும் பயன்படுமென்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். அதோடு, பெற்றோரும் சேமித்து, தங்களது பிள்ளைகளுக்கும் சேமிப்புப் பழக்கத்தை சிறுவயது முதலே ஊட்டி வளர்த்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார். சிறுசேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பொதுமக்கள் பயனடைய வேண்டுமென என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.