தமிழ்நாடு

பிப்.10ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை - கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

webteam

புதிய டிராய் கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப் 1௦ ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக கோவை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

டிராய் எனப்படும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டி.டி.ஹெச் சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ.153.40 கட்டணத்திற்கு தேர்வு செய்து கண்டு களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 

புதிய கட்டணம் மாதம் ரூ.130 ஆகும். அதற்கான ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 ரூபாய் ஆகிறது. புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது என்று தெரிவித்தது.

இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலாகும் நிலையில் டிராயின் புதிய கட்டண விதிகளுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கோவை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அனு பாபு செய்தியாளர்களை சந்தித்த போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை கேபிள் ஒளிப்பரப்பு நிறுத்தப்பட உள்ளதாகவும், கட்டணத்தை குறைக்காவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆளுனர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.