தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் மறைமுக கட்டண உயர்வா?: கலக்கமடைந்துள்ள சாமானியர்கள்

webteam

தமிழகத்தில் முன்னறிவிப்பின்றி அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக அரசின் அரசாணை இல்லாமலேயே போக்குவரத்து கழகங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டீசல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, சாதாரண பேருந்தை டீலக்ஸ் பேருந்தாக மாற்றி‌யதன் மூலம், ரூ.3 என்கிற கட்டணம் தற்போது ரூ.7-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் ரூ.14 என்ற கட்டணம், ரூ.29-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே டீலக்ஸ் பேருந்தில், 28 கிலோ மீட்டருக்கு 14 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், தற்போது 22 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் பெயர் பலகையை மட்டுமே மாற்றம் செய்து மட்டுமே இந்த கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வெளியூர் செல்லும் பேருந்துகளில் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் அரசாணை ‌இல்லாமல், அரசின் அறிவுறுத்தலின் படி, போக்குவரத்து கழகங்களே கட்டண உயர்வு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.பேருந்து கட்டண உயர்வு சாமானியர்களின் மீது அதீத பாரத்தைச் சுமத்தும் செயல் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.