தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையொட்டி தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2023ல் முறிந்த அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளதை சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் உறுதிப்படுத்தினார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை. இபிஎஸ் தலைமையிலேயே கூட்டணி. யாருக்கு எத்தனை தொகுதி, வெற்றிபெற்ற பின் எப்படி ஆட்சியமைப்பது என்பது பின்னர் விவாதிக்கப்படும். அதிமுக எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான். தேர்தல் விஷயங்களில் இணைந்து செயல்படுவோம்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், அமித் ஷா தெரிவித்த கூட்டணி ஆட்சி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “பாஜகவுடன் கூட்டணி மட்டுமே; தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் அமித் ஷா கூறினார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறவில்லை. முதற்கட்டமாக பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது. இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரவுள்ளன” என அவர் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தமிழக பாஜக தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவரிடம், எடப்பாடி பழனிசாமி கூட்டணி தொடர்பாக பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி பற்றி மத்திய தலைமைதான் முடிவு செய்யும். உள்துறை அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முடிவு செய்வர்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக இடையே கூட்டணி உறுதியான சில நாட்களிலேயே எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருத்திருக்கும் கருத்து பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.