14, 17 மற்றும் 19 வயதுகளுக்கு உட்பட்ட ஆண்கள் - பெண்கள் என இரு பாலருக்குமான மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நெல்லை பாளையங்கோட்டை சர்வதேச நீச்சல் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஃப்ரீ ஸ்டைல், பட்டர்பிளை, பிளாக் ஸ்ட்ரோல் என 47 வகைகளில் நீச்சல் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டு போட்டிகளை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில் முதலிடம் பிடித்து வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,300 மாணவிகள் 2,065 மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இன்று தொடங்கி வரும் 25 ஆம் தேதி வரை இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசுகையில்...
“மாநில சட்டப்பேரவை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பீகாரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று தமிழக ஆளுநர் 3 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் நடந்து கொண்டது தொடர்பாகவும், அவ்வாறு மாநிலங்களில் ஆளுநர்கள் செயல்படக் கூடாது எனவும் வலியுறுத்தி பேசினேன்.
தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுப்பது கிடையாது. எந்த முயற்சியும் எடுக்காமல் தீர்மானங்கள் குறித்து யோசிக்காமல் அதனை திருப்பி அனுப்பி விட்டு மீண்டும் அந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தும், நிறைவேற்றாமல் இருந்து வருவது தொடர்பாகவும் பல்வேறு பிரச்னை குறித்தும் பேசினேன். தமிழக அரசு கொண்டுவரும் எந்த சட்டத்தையும் நிறைவேற்றாமல் ஆளுநர் கிடப்பில் போட்டத்தையும் தெளிவாக எடுத்துரைத்தேன்.
இதுகுறித்து பேச அனுமதி மறுத்ததுடன் உங்களது பேச்சு பதிவாகாது என ராஜ்யசபா துணைத் தலைவர் நாராயணன் தெரிவித்தார். மாநில ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக சட்டமன்றத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் குறித்து தவறாகவும் உண்மைக்கு புறம்பாகவும் எந்த கருத்தும் நான் கூறவில்லை. ஆனாலும், துணை சபாநாயகர் அதனை ‘பதிவு செய்ய மாட்டேன்’ என சொல்லிவிட்டார். அது ஏற்புடையதல்ல. அவர் என்ன நோக்கத்திற்காக பதிவு செய்ய மாட்டேன் என சொல்லி உள்ளார் என்பதும் தெரியவில்லை. ஆகையால் ஜனநாயக முறைப்படி எனது எதிர்ப்பை காட்டும் வகையில் வழிநடப்பு செய்திருந்தேன்.
புத்தக வெளியீட்டு விழாவில் ‘தம்பி ஞானசேகரன்’ என நான் சாதாரணமாக பேசியதை பெரிதுபடுத்தி வருகிறார்கள். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஞானசேகரன் என்ற நபர் எனக்கு சால்வை அணிவித்தார்.
அவரது பெயரை கேட்டு நகைச்சுவையாக அவரை மையப்படுத்தி பேசியதை சர்ச்சையாக்கி விட்டனர். வெட்டி ஒட்டி அந்த காணொளியை பயன்படுத்தி உள்ளனர். முழு காணொளியை பார்த்தால் அந்த விவகாரத்தின் உண்மை நிலை தெரியும்.
யுஜிசி என்பது எந்த ஒரு அதிகாரமும் இல்லாத அமைப்பு. மாநில அரசுதான் அனைவருக்குமான கல்வி சாலையை உருவாக்குகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இன்ஸ்டியூட் ஆக மட்டுமே உள்ளது. யுஜிசி ஆய்வு நிறுவனங்களுக்கு மட்டுமே பணம் கொடுப்பார்கள். கல்வி நிறுவனங்களை மாநில அரசுகளே நடத்தி வருகிறது. பல்கலைக்கழகங்களின் தலைவர்களாக முதல்வர்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் அந்த பகுதியை விட்டு வேறு எங்கும் செல்லாது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். விஜயை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை.
சமூக விரோதிகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் நோக்கத்தோடு சிலர் செயல்பட நினைக்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால், நீங்கள் சொல்லும் நபர் திருமண மண்டபத்தில்தான் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நபர் செயல்படுகிறார்” என விஜய் குறித்து மறைமுகமாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.