#TNElectins2026 | மாற்றம் தேவையில்லை என கூறினாரா அஜித்?
தமிழ்நாட்டில், இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த செய்திகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வாக்களித்த இளையராஜா
Ilaiyaraaja
தி.நகரில் தனது வாக்கை செலுத்தினார் இசையமைப்பாளர் இளையராஜா
மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
முதல்வர் ஸ்டாலின்
“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்! 2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்! தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்”.
வாக்களித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi
கீழ்ப்பாக்கத்தில் தனது வாக்கை செலுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி
வாக்களித்த பின் நடிகர் சிவக்குமார் பேட்டி
என்னுடைய வேண்டுகோள் என்ன என்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும், டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். குடிமக்களை குடிகார மக்கள் ஆகியது போதும். தன் குடும்பத்துடன் கோடி கோடியாக சொத்துக்களை குவிக்காமல், கடைக்கோடி மனிதனின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டும்.
வாக்களித்த பின் சத்யராஜ் பேட்டி
நான் எனது ஜனநாயக கடமையை செய்துவிட்டேன். எல்லோரும் ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு மேல் எதுவும் சொல்லக்கூடாது இது ரகசிய வாக்கெடுப்பு. ஆனால் என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால் அது ரகசியம் இல்லை.
வாக்கு செலுத்திய என்.ஆனந்த்
தவெக பொதுச் செயலாளரும் சென்னை தி.நகர் வேட்பாளருமான என்.ஆனந்த், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். பின்னர், பேசிய அவர், ”வெற்றி நிச்சயம்; தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதிதான் நிச்சயம் முதல்வராக வருவார். எந்த சந்தேகமும் இல்லை. எல்லோரும் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மாற்றத்தை தலைவர் தளபதிக்கு தர இருக்கிறார்கள்” என்றார்.
அஜித் பெயரில் சர்ச்சை
காலையில் முதல் நபராக வந்து வாக்களித்தார் அஜித். இந்நிலையில் அவர் வாக்களித்துவிட்டு செல்லும் போது செய்தியாளர்கள் மாற்றம் வருமா? எனக் கேட்டதாகவும், அதற்கு அஜித் NO NEED எனக் கூறியதாகவும் தகவல் பரவியது. தற்போது இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா "மாற்றம் தேவையில்லை என நடிகர் அஜித் கூறவில்லை, NO NEED என அஜித் கூறியதாக பரவிய தகவல் தவறானது. தவறான தகவலை பரப்பி வருகிறார்கள் என நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பதிலளித்துள்ளார்.
வாக்களித்த ஹெச் வினோத்
H Vinoth
அணைக்கட்டு தொகுதியில் வாக்களித்த இயக்குநர் ஹெச்.வினோத்.
வாக்களித்த பின் சுந்தர் சி பேட்டி
ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இப்போது உடனடியாக மதுரைக்கு கிளம்புகிறேன். ஒரு வேட்பாளராக என்னுடைய தொகுதி மக்களை சந்திக்கிறேன். பிரச்சாரத்தின் போது உண்மையை சொன்னேன். மதுரை மத்திய தொகுதியை பார்த்தாலே அங்கிருக்கும் பிரச்சனைகள் நமக்கு தெரியும். அதைத்தான் நான் சொன்னேன், அரசாங்கம் செய்ய தவறியதை, செய்ய வேண்டியதை சொன்னேன். அதில் உண்மை இருந்ததால் மக்களுக்கு என் கருத்து போய் சேர்ந்திருக்கிறது.
வாக்களித்த வாக்கு செலுத்திய அண்ணாமலை!
கோவை கவுண்டம்பாளையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் அனைவரும் காலைமுதலே ஜனநாயகக் கடமையை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். வாக்குச் சாவடிகளில் நமது தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றனர். எல்லோரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். மதியம் வெயில் அதிகமாக இருந்தாலும்கூட பெரியவர்கள் குடையுடன் வந்து வாக்கு செலுத்துங்கள். வாக்குச்சாவடிகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆகையால் யாரும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். நமது ஜனநாயகக் கடமையைச் செய்ய வேண்டும். தமிழகத்தில் நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் வரும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்றார்.
வாக்களித்த தனுஷ்
Dhanush
ஆழ்வார்பேட்டையில் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் தனுஷ்
ஜனநாயகச் செயல்முறையை வலுப்படுத்த வேண்டும் - தேசிய பாஜக முன்னாள் தலைவர் ஜே.பி. நட்டா
"தமிழ்நாடு தற்போது தலைவிரித்தாடும் ஊழல் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் முனிவர்கள் வாழ்ந்த பூமியாகத் திகழ்ந்த இது, இப்போது ஒரு கலாசார அடையாள நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வளர்ச்சியையும் கலாசார முன்னேற்றத்தையும் ஒருங்கே உறுதி செய்யும் ஓர் அரசாங்கத்தைத் தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். உங்கள் வாக்கைச் செலுத்துங்கள்; மற்றவர்களும் அவ்வாறே செய்யுமாறு ஊக்கப்படுத்துங்கள்".
வாக்களித்த விக்ரம்
Vikram
பெசன்ட் நகரில் வாக்களித்த நடிகர் விக்ரம்.
வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க விஜய் கோரிக்கை
விஜய்
TVK தலைவர் விஜய், வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படாததால், வாக்காளர்களால் தங்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல இயலவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள அவர், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின் திட்டமிடல் குறைபாடுடையதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப்பதிவு : 9 மணி நிலவரம்
தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி, 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளன.
45 நிமிடம் காத்திருந்து வாக்களித்த அமைச்சர் நேரு
திருச்சியில் உள்ள தில்லைநகர் வி.வி.பேட் இயந்திரம் பழுதானதால் அமைச்சர் கே.என்.நேரு வாக்களிக்காமல் காத்திருந்தார். 45 நிமிடத்திற்குப் பிறகு அவர் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். வாக்கு செலுத்தியபின் பேட்டியளித்த அவர், “தேர்தலில் ஒரு சவாலும் இல்லை. எப்போதும்போல்தான் இருக்கிறது. அனைத்தும் சரியாகத்தான் இருக்கிறது. மக்களுடைய ஆதரவு தளபதிக்கு இருக்கிறது. நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறாக வருகிறது எனச் சொன்னதையடுத்து சுத்தமாக மாற்றிவிட்டு புது இயந்திரம் மாற்றியுள்ளனர்” என்றார்.
வாக்களித்த பா இரஞ்சித்
Pa Ranjith
இயக்குநர் பா.இரஞ்சித் தனது ஊரான கரலப்பாக்கத்தில் வாக்கு செலுத்தினார்.
குடும்பத்தினருடன் வாக்கு செலுத்திய முதல்வர்
சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் தமிழக முதல்வரும் சென்னை கொளத்தூர் தொகுதி வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் தனது மனைவி மற்றும் மகனுடன் வாக்கு செலுத்தினார்.
வாக்களித்த அட்லீ
Atlee
ஆழ்வார்பேட்டையில் தனது வாக்கை பதிவு செய்த இயக்குநர் அட்லீ
நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
ஏழை, பணக்காரர் என எல்லோருக்கும் ஒரே ஓட்டுதான். அதுதான் நம்முடைய பவர். நான் ஒரு வாக்காளர். வாக்களிப்பதுதான் என்னுடைய கடமை.முதல்முறையாக இந்தத் தேர்தலில்தான் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக நான் பார்க்கிறேன். ஆகையால், இது எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க நானும் ஆர்வமாக இருக்கிறேன். என் கடமையை நான் சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். தன்னுடைய உரிமையை விற்கக்கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அதை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். எல்லோரும் ஆர்வமாய் வாக்களித்து வருகின்றனர். என்னுடைய ரசிகர்களும் உடனே போய் ஓட்டு போட வேண்டும் என்று நான் அவர்களை வலியுறுத்துகிறேன்.
வாக்களித்த பின்பு கமல்ஹாசன் பேட்டி
என்னுடைய ஜனநாயக கடமையை நான் செய்துவிட்டு வந்திருக்கிறேன். மற்றவர்களும் அதை செய்ய வேண்டும் என நம்புகிறேன். மாற்றம் வந்து கொண்டே இருக்கும். உங்கள் வாழ்க்கை மாறும்.
வாக்களித்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்தார். வாக்களித்துவிட்டு செல்லும் போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினி `ஓட்டுரிமை இருக்கும் எல்லோரும் ஓட்டு போடணும்' என்று கூறினார்.
அமீர் வாக்களித்தார்
Ameer
மதுரை அண்ணாநகரில் வாக்களித்த இயக்குநர் அமீர்.
ஜனநாயகக் கடமையாற்றிய விஜய்
தவெக தலைவரும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளருமான விஜய், சென்னை நீலாங்கரையில் தனது வாக்கைச் செலுத்தினார். தவெக தலைவராக அவர் முதல்முறையாக வாக்கு செலுத்தினார்.
வாக்கு செலுத்திய செல்வப்பெருந்தகை
காஞ்சிபுரம் மணிமங்கலத்தில் தனது குடும்பத்தினருடன் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கு செலுத்தினார்.
வாக்கு செலுத்திய கமல்ஹாசன்
தேனாம்பேட்டையில் மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்து வாக்களித்தார் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன்.
வாக்கு செலுத்திய பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை சாலிகிராமத்தில் தனது மகன்களுடன் சென்று வாக்களித்தார்.
வாக்களித்த சசிகுமார்
Sasikumar
நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் புதுத்தாமரைபட்டியில் வாக்கை பதிவு செய்தார்.
பேருந்துகள் இல்லை.. மீண்டும் சென்னைக்கே திரும்பும் மக்கள்
தேர்தலில் தங்களது வாக்கினை செலுத்த சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் கிடைக்காமல் அவதி.. நேற்று மாலை முதல் காத்திருந்தும் சொந்த ஊர்களுக்குப் போதிய பேருந்துகள் கிடைக்காததால், மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலை இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
ஆர் ஜே பாலாஜி வாக்களித்தார்
R J Balaji
நடிகரும் இயக்குநருமான ஆர் ஜே பாலாஜி கோட்டூர்புரத்தில் வாக்களித்தார்.
எடப்பாடி பழனிசாமி பேட்டி
இன்று அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடிக்குச் சென்று தங்களுடைய ஜனநாயக் கடமையை ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இப்போதுதான் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. வாக்காளர்கள் வாக்கு செலுத்திக் கொண்டிருக்கின்றனர். 100 சதவிகிதம் நம்பிக்கையுடன் இருக்கிறேன். வாக்காளர்கள் அவர்களுடைய விருப்பப்படி வாக்கு செலுத்தவும்.
தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
வாக்குச்சாவடியே ஜனநாயகத் திருக்கோயில்; வாக்காளர்களே மகேசன்கள். இதே வாக்குச் சாவடிக்கு ஓர் உயரிய மருத்துவ மாணவியாக வந்தேன். இதே வாக்குச்சாவடிக்கு ஓர் அரசியல்வாதியாக வந்தேன். பாஜக மாநிலத் தலைவராக வந்தேன். அதன்பிறகு ஓர் ஆளுநராக வந்தேன். இன்று வேட்பாளராக வந்திருக்கிறேன். ஆகையால், இதுதான் ஜனநாயகத்தின் மாண்பு. ஒரே வாக்குச் சாவடியில் ஒரு சாமானிய குடிமக்கள் உயர்ந்து வர முடியும் என்பதற்கு வாக்குச்சாவடிகள் ஒரு சான்று. அனைவரும் வாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்.
குடும்பத்தோடு வந்து வாக்களித்த சுந்தர் சி
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி தனது மனைவி குஷ்பூ மற்றும் மகளுடன் மந்தைவெளியில் வாக்களித்துள்ளார்.
வாக்கு செலுத்திய தமிழிசை செளந்தரராஜன்
தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், சென்னை மயிலாப்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை செளந்தரராஜன் தனது வாக்கைச் செலுத்தினார்.
வாக்கைச் செலுத்திய எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது மனைவி மற்றும் மகனுடன் சிலுவம்பாளையம் கிராமத்தில் வாக்கு செலுத்தினார்.
பிரதமர் மோடி அழைப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களியுங்கள். மிகுந்த உற்சாகத்துடன் புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டின் இளைஞ்ரகளும் பெண்களும் பெருமளவில் திரண்டு வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவில் புதிய சாதனைக்கு வழிவகை செய்ய வேண்டும்.
வாக்களித்த நடிகர் ஜெய்
Jai
நடிகர் ஜெய் அடையாறு வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
பொதுமக்கள் சாலைமறியல்..
வாக்களிக்க போதிய பேருந்துகள் இல்லாத நிலையில் பூவிருந்தவல்லி- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலைமறியல்.. பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்ல பேருந்துகள் இல்லை என பொதுமக்கள் புகார்
வாக்களித்தபின் சீமான் பேட்டி
ஜனநாயகக் நாட்டில் கடைசி கருவி வாக்குதான். அதனை நாம் எல்லோரும் பயன்படுத்த வேண்டும்.
வாக்களிக்காமல் இருப்பதும் ஜனநாயகத் துரோகம்தான். ஒவ்வொரு வாக்கிலும் மாற்றம் வரும். எல்லோரும் வாக்களியுங்கள் என்பதை வலியுறுத்துகிறேன்
விவிபேட் இயந்திரத்தில் கோளாறு.. காத்திருக்கும் அமைச்சர்
திருச்சியில் உள்ள தில்லைநகர் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க அமைச்சர் கே.என்.நேரு வருகை
ஆனால் அந்த வாக்குச்சாவடியில் வி.வி.பேட் இயந்திரம் பழுதானதால் அமைச்சர் வாக்களிக்காமல் காத்திருக்கிறார். அந்த வாக்குச்சாவடியில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.
வாக்கு செலுத்திய சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளரும், காரைக்குடி வேட்பாளருமான சீமான், சென்னை நீலாங்கரையில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவையொட்டி தமிழகத்தில்
ஒன்றரை லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 23 ஆயிரம் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதாலும், 18 வயது முதல் 40 வயதுக்குள் சுமார் இரண்டரை கோடி பேர் உள்ளதாலும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இன்று தொடங்கிய தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 85 பேர் களம் காண்கின்றனர். இதில் 3,579 ஆண்களும், 443 பெண்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் அடக்கம்.
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்