பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ள தேர்தலாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 இருக்கிறது. 1977-க்குப் பிறகு திமுக அல்லது அதிமுகவே தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துவந்த நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் மாற்றாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய அளவிலான வெற்றியை பெற்றிருக்கிறது. அதேசமயம், தவெக 108 இடங்களை தனிப்பெரும்பான்மையாக வென்றிந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கையாக அது இல்லாததால், ஆளுநர் தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காமலேயே இருந்து வருகிறார்.
இந்த சூழலில் தான், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ள நிலையில், அக்கட்சி தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்திருக்கிறது. அதேசமயம், மேலும் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்பட்டு வரும் சூழலில், விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளின் ஆதரவை தவெக கோரி வருகிறது. தங்களின் முடிவை நாளை அறிவிக்கப்போவதாக அக்கட்சியின் தலைவர்கள் கூறியிருக்கின்றனர். இதற்கிடையில், அதிமுக மற்றும் திமுக இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.
அதற்கு வலுசேர்க்கு விதமாக இன்று புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டமும், சென்னையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டமும் நடத்தப்பட்டிருக்கிறது. திமுக எம்.எல்.ஏ-க்கள் மே-10 வரை சென்னையிலேயே தங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தசூழலில் தான், இந்தக் கூட்டத்திற்கு பிறகு திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பேசியது குறித்தும், திமுக அதிமுக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா? என்ற கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.
டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ”இந்த கூட்டத்தின் மூலம் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு கண்டனங்களை தெரிவித்திருக்கிறோம். காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்றால் அவர்களை மற்ற 23 இடங்களில் தோற்கடித்தது யார் என அவர்கள் எண்ண வேண்டும். சிந்திக்காமல் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால், அவர்களுடைய அரசியல் அனைத்து மாநிலங்களிலும் இவ்வாறு தான் இருக்கிறது.
அதேபோல, அதிமுகவுடன் கூட்டணி அல்லது ஆதரவு பற்றி தலைவர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனைத் தலைவர் மறுத்துள்ளார். அப்படி ஒரு முடிவை தலைவர் எடுத்தால் அதனை திமுக ஏற்றுக்கொள்ளும். அதேசமயம், தமிழக வெற்றி கழகம் பதவி ஏற்பதை நாங்கள் தடுக்கவில்லை. ஆளுநர் எண்ணிக்கை கேட்கிறார்; இவர்கள் எண்ணிக்கை காண்பிக்க வேண்டும், பெரும்பான்மை ஆதரவு காண்பிக்க வேண்டும் என்பது அனைத்து மாநிலங்களும் உள்ள இயல்புதான். அரசாங்கம் கலையும் நிலை ஏற்பட்டால் அதற்கு ஆளுநர் தான் பொறுப்பு. அதனால்தான், பெரும்பான்மையை ஆளுநர் கேட்கிறார்; ஆளுநரின் முடிவில் நாங்கள் தலையிடவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.