தவறான தொழில் செய்பவர் எனக் கூறி உள்ளே தள்ளிவிடுவேன் என ஆய்வாளர் மிரட்டியதால் தான் ரேணுகா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருவேற்காடு பகுதியில் உள்ள செந்தமிழ் நகரில் ரேணுகா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் உள்ள அமிர்தவள்ளி என்பவரின் குடும்பத்தினருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர் பிரச்னையின் காரணமாக திருவேற்காடு காவல்நிலையத்தில் ரேணுகா மீது அமிர்தவள்ளி புகார் அளித்தார். அதுகுறித்த விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற ரேணுகா, மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைக் கண்ட காவலர்கள் அவர் மீது பற்றிய எரிந்த தீயை போராடி அணைத்தனர். பின்னர் பலத்த தீக்காயம் அடைந்த ரேணுகாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். காவல்துறையினர் அமிர்தவள்ளி குடும்பத்துக்கு ஆதரவாக செயல்பட்டதுதான் ரேணுகா தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே ஆய்வாளர் அலெக்ஸாண்டர் ரேணுகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆடியோவும் வெளியானது. அதில் அதிகமாக பேசினால் ரிமாண்ட் செய்துவிடுவேன் என ஆய்வாளர் அலெக்சாண்டர் மிரட்டுகிறார். அதற்கு அப்பெண் நான் என்ன செய்தேன் எனக் கேள்வி கேட்கிறார். யாருடைய புகாரையும் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நானாகவே நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் உண்டு. நீயா? நானான்னு பார்த்துவிடுவோம். உன்னை உள்ளே வச்சுருவேன். எனக்கு ஏதும் பிரச்னையில்லை என ஆய்வாளர் சொல்கிறார்.
இதுதவிர தீக்குளித்து உயிருக்கு போராடும் ரேணுகா தனது கணவரிடம், என்னை தவறான தொழில் செய்பவர் எனக் கூறி உள்ளே போட்டுவிடுவேன் என மிரட்டினார்கள். நான் என்ன அப்படிப்பட்டவளா..? எனக் கேட்கிறார். இதனால்தான் ரேணுகா தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே காவல்நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னைப் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.