தமிழ்நாடு

திருவள்ளூர்: ஆன்லைன் விளையாட்டு... மன உளைச்சலில் மாணவன் எடுத்த விபரீத முடிவு

திருவள்ளூர்: ஆன்லைன் விளையாட்டு... மன உளைச்சலில் மாணவன் எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

ஆன்லைன் விளையாட்டால் மன உளைச்சலில் 8-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொன்னேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி என்ஜிஓ நகரை சேர்ந்தவர் பாபு. தனியார் நிறுவன ஊழியரான இவரது மகன் ராகேஷ் (13). இவர் தனியார் பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது பெரியம்மாவின் வீட்டின் மாடியில் படித்துக் கொண்டிருந்த ராகேஷ், நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த மாணவனின் தாத்தா, உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அறையின் கதவு உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருப்பதை கண்டு கதவை தட்டியுள்ளனர்.


ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மின் விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் மாணவன் ராகேஷ் தூக்கிட்ட நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவன் ராகேஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் விளையாட்டால் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்த மாணவன் ராகேஷ் அதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


கடந்த 4 மாதங்களாக ஆன்லைன் விளையாட்டில் ராகேஷ் ஈடுபட்டிருந்ததாகவும், ஆன்லைன் விளையாட்டு செயலியை செல்போனில் இருந்து நீக்கிவிட்டு தம்மிடம் பேசியதாகவும், மீண்டும் பதிவிறக்கம் செய்ய கேட்டதாகவும் மாணவனின் தந்தை பாபு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் தன் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் விளையாட்டுகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் எனவும், தமிழக முதல்வர் இதனை நீக்க வேண்டும் எனவும், தன் மகனுக்கு நேர்ந்ததுபோல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது எனவும், பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.