செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பன்னீர் (37) என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 10 சவரன் வரதட்சனை கேட்டு, 5 சவரன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில் 4 சவரன் நகை மட்டுமே வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சீர்வரிசை பொருட்களும், பைக் ஒன்றும் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மூத்த மருமகள் 12 சவரன் வரதட்சணை கொண்டு வந்ததாகவும் பாக்கியுள்ள 1 சவரன் நகையை வாங்கி வருமாறு கணவர் குடும்பத்தினர் லோகேஸ்வரியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மறுவீட்டுக்காக நேற்று தாய் வீட்டிற்கு வந்திருந்த லோகேஸ்வரி தமது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்து அழுதுள்ளார். பெரிய மருமகள் அதிக நகைக் கொண்டு வந்ததையும், பாக்கி 1 சவரன் நகையை வாங்கி வருமாறும், வீட்டிற்கு ஏசி வாங்கிக் கொடுக்குமாறும் தொந்தரவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் கழிவறையில் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் லோகேஸ்வரி வராததை கண்ட அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது கழிவறையில் தூக்கிட்ட நிலையில் இருந்த அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைத்து பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 1 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.