திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்த நாய்
திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்த நாய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

‘அதுவும் உயிர் தான சார்..’ - சாலை விபத்தில் உயிரிழந்த நாய்க்கு காவலர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

Angeshwar G

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே புது மார்க்கெட் வீதி, மங்கலம் சாலை, பூங்கா சாலை, பெருமாள் கோவில் வீதி என நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்த பகுதி மாநகராட்சியின் முக்கிய பகுதி என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால் போக்குவரத்தை கண்காணிக்க புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் பணியாற்றி வந்தனர்.

இந்த பகுதியில் சுற்றித்திரிந்த குட்டி நாய் ஒன்று புறக்காவல் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த நாய்க்கு தினந்தோறும் உணவு வழங்கி வந்துள்ளனர் பணியிலிருந்த காவலர்கள். இது தொடர்கதையான நிலையில், தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாய் அங்கேயே வளர்ந்துள்ளது. காவலர்கள் வந்தால், அவர்களுடனேயே சுற்றி திரியும்.

இப்படியாக வளர்ந்த அந்த நாய், அந்தப் பகுதியில் சென்ற வாகனம் ஒன்றின் மீது சமீபத்தில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அறிந்த போலீசார் வேதனை அடைந்தனர்.

தொடர்ந்து தங்களுடன் நான்கு ஆண்டுகளாக பயணித்த நாய் இல்லாததால் சோகமடைந்த போலீசார், நாய்க்கு இறுதி மரியாதை செய்ய தீர்மானித்துள்ளனர். அதன்படி புற காவல் நிலையம் அருகிலேயே குழி தோண்டி நாய் உடலுக்கு இறுதி மரியாதை செய்து அதை நல்லடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.