Old women pt desk
தமிழ்நாடு

"உயிருடன் இருக்கும் எனக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கியது யார்?" திருப்பூரில் மூதாட்டி பரபரப்பு புகார்

உயிருடன் இருக்கும் மூதாட்டியின் பெயரில் இறப்பு சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக மூதாட்டி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: சுரேஷ் குமார்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளுக்காக மனு அளித்தனர். இந்நிலையில், பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி மாராத்தாள் (95) என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், எனக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். எனது மகன் கந்தசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

Old women

இந்நிலையில், ”எனது கணவருக்குச் சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் கரடிவாவியில் இருந்தது. இதையடுத்து எனக்கு இறப்புச் சான்றிதழ் பெற்று, உறவினர் அந்த நிலத்தை முறைகேடாக மோசடி செய்து தங்களது பெயரில் பதிவு செய்துள்ளனர். உயிருடன் வாழ்ந்து வரும் எனக்கு, எப்படி இறப்புச் சான்றிதழை அதிகாரிகள் வழங்கினார்கள். இதனால் எனது குழந்தைகளுக்கு சேர வேண்டிய பூர்வீக சொத்தை, மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளார்.