தமிழ்நாடு

'நான் பிஜேபி காரன் தகராறு பண்ணுவேன்' - திருப்பூர் பாஜக தலைவர் போலீசாருடன் வாக்குவாதம்

webteam

’’நான் பிஜேபி காரன் தகராறு பண்ணுவேன், திமுக அடாவடி என தகராறு பண்ணுவேன்’’ என திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

திருப்பூரில் நடைபெற உள்ள சிறு குறு தொழில் மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார். பல்லடம் சாலை வழியாக திருப்பூருக்கு முதல்வர் வருவதற்கு ஏற்ப போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சாலையோரம் நின்ற வாகனங்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வண்ணம் போக்குவரத்தை சீர்படுத்தி வந்தனர் .

அப்பொழுது பல்லடம் சாலையில் உள்ள கடையில் இனிப்பு வாங்குவதற்காக திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் சென்றுள்ளார். சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு கடைக்கு செல்ல முற்பட்டபோது அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் வாகனத்தை எடுத்து ஓரமாக நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் வாகனத்தை எடுக்காமல் நீண்ட நேரம் காவலர்களிடம் வாக்குவாதம் செய்த பாஜக மாவட்ட தலைவர் செந்தில்வேல், ’’வாகனத்தை எடுக்க முடியாது. நான் பிஜேபி காரன் தகராறு செய்வேன். திமுக அடாவடி என தகராறு செய்வேன். நான் நினைத்தால் ஆயிரம் பேரை கொண்டு வந்து சாலை மறியல் செய்வேன்’’ என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.