செய்தியாளர்: சுரேஷ்
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி அம்பேத்கர் நகர் பகுதியில் தவெக கட்சியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் கொடிக் கம்பம் வைத்து கொடியை ஏற்றி உள்ளனர். இதனையடுத்து அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் அனுமதிபெற்று கொடிக் கம்பம் அமைக்குமாறு அக்கொடிக் கம்பத்தை அதிகாரிகள் தரப்பில் அகற்றி உள்ளனர்.
இதையடுத்து தவெக கொடிக் கம்பம் அமைக்க அக்கட்சியினர் அதிகாரிகளிடம் அனுமதி கோரி கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் அக்கட்சியினர் நேற்று இரவு அதே இடத்தில் மீண்டும் கொடிக் கம்பம் அமைத்து கொடியை ஏற்றி உள்ளனர். இதனை அறிந்த வருவாய்த் துறையினர் இன்று அந்த கொடிக் கம்பத்தை அகற்ற முயன்றனர். அப்போது தவெக கட்சியினர் வட்டாட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, விசிக ஆகிய கட்சிகளின் கொடிக் கம்பங்களும் உரிய அனுமதி இல்லாமல் தான் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை முதலில் அப்புறப்படுத்துங்கள் எனக் கூறி தவெக-வினர் கூறியதால் வருவாய்த் துறையினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து தவெக-வினர் அனைத்துக் கட்சியின் கொடிக் கம்பங்களையும் அகற்றுமாறு குரும்பேரி கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனு அளித்ததால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு காணப்பட்டது.