தமிழ்நாடு

'சுடுகாட்டுக்கு பாதை வேண்டும்' - திமுக எம்எல்ஏ காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

webteam

நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டிற்கு பாதை கேட்டு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பன்னாடகுப்பம் ஆத்தூர் பஞ்சாயத்து பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமாரிடம் பலமுறை மனு கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி இன்று ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் வந்த காரை ஆத்தூர் பஞ்சாயத்து பொதுமக்கள் திடீரென வழிமறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.