தமிழ்நாடு

திருப்பத்தூர்: மலை மீதுள்ள குளத்தில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயரிழப்பு

kaleelrahman

ஆம்பூர் அருகே முருகன் கோயில் மலைமீதுள்ள குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு. 2 கிலோ மீட்டர் தூரம் மலைப்பகுதியில் குழந்தையின் சடலத்தை உதவி ஆய்வாளர் சுமந்து வந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள கடம்பூர் கைலாசகிரி பகுதியில் வசித்து வருபவர்கள் லோகேஸ்வரன் - மீனாட்சி தம்பதியினர். இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தனது இரு குழந்தைகளையும் அழைத்துகொண்டு மலை மீதுள்ள முருகன் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் லோகேஸ்வரன் அங்குள்ள பாறையின் மீது அமர்ந்து ஓய்வு எடுத்து கொண்டு இருந்துள்ளார் அப்போது 4ஆம் வகுப்பு படிக்கும் அவரது 8 வயது மகன் ஜஸ்வந்த் மற்றும் அவரது சகோதரி ஹரி பிரீத்தா ஆகியோர் அங்கு உள்ள குளத்தில் மீன் பிடித்து விளையாடியுள்ளனர்.

அப்போது திடீரென ஹரி பிரீத்தா நீரில் மூழ்கியுள்ளார். அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அவரது அண்ணன் ஜஸ்வந்த் ஆகிய இருவரும் குளத்தில் மூழ்கி உள்ளனர். இதை அறிந்த அவரது தந்தை லோகேஸ்வரன் குளத்தில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் குழந்தைகள்; இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதையடுத்து உடனடியாக உமராபாத் காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் குளத்தில் மூழ்கிய குழந்தைகள் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் 1 மணிநேர போராட்டத்திற்குப் பின்பு இருவரையும் மீட்டனர்.

பின்னர், மலைப்பகுதியில் இருந்து சடலத்தை எடுத்து வருவதற்கு யாரும் இல்லாததால் காவல் உதவி ஆய்வாளர் காந்தி, ஹரி பிரீத்தாவின் உடலை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தோள் மீது சுமந்து வந்து ஆம்புலன்சில் வைத்தார். மற்றொரு சடலத்தை காவலர்களும் அங்குள்ள சிலர் டோலி கட்டி தூக்கி வந்து 2 சடலத்தையும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.