தமிழ்நாடு

திருப்பத்தூர்: சாதியை கூறி தகாத வார்த்தையால் பேசியதாக பெண் ஊராட்சிமன்ற தலைவர் புகார்.!

webteam

சாதி பெயரை குறிப்பிட்டு தகாத வார்த்தையால் பேசி பதவியில் உட்கார விட கூடாது என வழக்கறிஞர் சரவணன் என்பவர் மிரட்டியதாக, கந்திலி காவல் நிலையத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த (அதிமுக) பெண் ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை கிராம ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவரை பார்த்து சாதி பெயரை குறிப்பிட்டு தகாத வார்த்தையால் பேசி, ஒருமையில் பேசி இவர்களை எல்லாம் பதவியில் உட்கார வைத்தால் இப்படி தான், இனி பதவியில் இருக்க கூடாது என்று பகிரங்கமாக கூறி சென்றதாக தெரிகிறது.

இதனால் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி, அப்பகுதி கவுன்சிலர் மற்றும் பொதுமக்களுடன் சென்று கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.