கந்து வட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் தனது 3 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
நெல்லை மேல கருங்குளத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். இவர் பெயிண்டராக உள்ளார். தொழில் செய்வதற்காக கடந்த 4 வருடத்திற்கு முன்பு குறிச்சி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் காலி மனை பத்திரத்தை அடகு வைத்து 50 ஆயிரம் பணம் வாங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில், அருள்தாஸ் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அருள்தாஸ் கூறுகையில், “4 வருடமாக ரூ.2 இலட்சத்திற்கும் அதிகமாக வட்டி கட்டி வந்துள்ளேன். கடந்த 6 மாதமாக தொழில் சரியாக இல்லாத காரணத்தால் வட்டி கட்ட முடியவில்லை. வாங்கிய தொகை 50 ஆயிரமும், வட்டி ஒரு லட்சம் கட்ட வேண்டும் எனவும் கூறி கிருஷ்ணன் என்பவர் இன்று காலை வீட்டிற்கு வந்து கட்டையால் அடித்து துண்புறுத்தினார். மேலும் செல்போனையும் பறித்து சென்றார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட வந்தேன்.” எனத் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் தினம் கொண்டாட வேண்டிய இன்று தனது மூன்று குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் 5 பேர் தீக்குளிக்க முயன்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.