திருக்குறுங்குடி அருகே சீட்டு விளையாடுவதற்காக கந்து வட்டிக்கு பணம் வாங்கியவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பி தலைவன் பட்டயத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் சீட்டு விளையாடும் பழக்கமுடையவர். இவர் சீட்டாடுவதற்காக அதே ஊரை சேர்ந்த சிவன்பாண்டி என்பவரிடம் வட்டிக்கு 12000 ரூபாய் பணம் வாங்கியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து வாங்கிய பணத்திற்கு வட்டி மட்டும் கட்டியுள்ளார் ராமச்சந்திரன். இந்நிலையில் நேற்று முன்தினம் பணம் கொடுத்த சிவன்பாண்டி, தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்து ராமசந்திரனையும் அவரது மனைவியையும் அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராமசந்திரன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஏர்வாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.