சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற நவம்பர் 29-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுவிநியோகத் திட்டத்தில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 குடும்ப அட்டைதாரர்கள், சர்க்கரை மட்டும் வாங்கும் அட்டைகளை வைத்துள்ளனர். பெரும்பாலானவர்களின் கோரிக்கைகளை ஏற்று சர்க்கரை அட்டைகளை அரிசி பெறும் அட்டைகளாக மாற்ற முதலமைச்சர் ஆணையிட்டிருப்பதாக அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி இன்று வரை சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற நவம்பர் 29-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
விருப்பமுள்ள சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் வரும் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.