தமிழ்நாடு

இறந்து பிறந்த குழந்தையை கழிப்பறையில் வீசிய அவலம் - உறவினர்கள் வாக்குவாதம்

webteam

நெய்யூர் அருகே தனியார் மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தையை உறவினர்களுக்கு தெரிவிக்காமல் கழிப்றையில் மறைத்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பி.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் பீர். இவரது மனைவி ஷிபானா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவரை நேற்று பிரசவத்திற்காக நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் ஷிபானாவுக்கு நேற்றிரவு பிரசவம் நடந்துள்ளது, ஆனால், செவிலியர்கள் பிறந்த குழந்தையை எடுத்துச் சென்றதோடு குழந்தை குறித்து எந்த தகவலையும் உறவினர்களிடம் சொல்லாமல் இருந்துள்ளனர்.

இதனையடுத்து உறவினர்கள் குழந்தையை தேடியுள்ளனர். அப்போது, குழந்தை இறந்த நிலையில் துணிகளால் சுற்றப்பட்டு மருத்துவமனை கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து தவறான சிகிச்சையால் குழந்தை இறந்து பிறந்ததை மறைக்கவே செவிலியர்கள் குழந்தையின் சடலத்தை கழிப்பறையில் மறைத்து வைத்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இறந்து பிறந்த குழந்தை மருத்துவமனை கழிப்பறையில் துணிகளால் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.