தமிழ்நாடு

சென்னையில் திடீரென வெடித்த ஃப்ரிட்ஜ்... ஒரே வீட்டில் சம்பவ இடத்திலேயே மூவர் மரணம்

webteam

ஊரப்பாக்கம் அருகே பிரிட்ஜ் வெடித்து மூன்று பேர் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த,  வெங்கட்ராமன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு திதி கொடுப்பதற்காக, துபாயில் வசித்து வந்த வெங்கட்ராமனின் மனைவி கிரிஜா (63) அவரது தங்கை ராதா (55), அவரது தம்பி ராம்குமார் (47), ராம்குமாரின் மனைவி பார்கவி (35) மற்றும் அவருடைய மகள் ஆராதனா (6) ஆகியோர் கடந்த இரண்டாம் தேதி ஊரப்பாக்கம் வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஆர்ஆர் பிருந்தாவன், அப்பார்ட்மெண்டில் உள்ள முதல் மாடியில், தூங்கிக் கொண்டிருந்த பொழுது இன்று அதிகாலை நான்கு மணியளவில் எதிர்பாராத விதமாக, வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்காரணமாக, அதிலிருந்து புகை வெளியேறியதை தொடர்ந்து, தூங்கிக்  கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அலறி அடித்து கூச்சலிட்டுள்ளனர். கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த பொழுது மூச்சு திணறி கிரிஜா, ராதா, ராம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உயிரிழந்த மூன்று பேரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்கவி மற்றும் ஆராதனா ஆகிய இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.