death
death pt desk
தமிழ்நாடு

கோவை: கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த மகளுடன் பெற்றோர் எடுத்த வீபரீத முடிவு

webteam

செய்தியாளர்: ஐஸ்வர்யா

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேசன் (65) - விமலா (55) தம்பதியர். இவர்களது மகள் தியா காயத்ரி (25), ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் காயத்ரிக்கும், கோவை வடவள்ளியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் தீட்சித் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் பெங்களூருவில் தங்கி ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

Death

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் காயத்ரிக்கும், அவருடைய கணவர் தீட்சித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து காயத்ரி, கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. திருமணமான ஒரு மாதத்திலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகள் தங்களது வீட்டிற்கு வந்தது பெற்றோருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று கணேசனை அவரது தம்பி செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால், பலமுறை அழைத்தும் அவர் போனை ஏற்காததால் சந்தேகமடைந்த அவர் நேற்றிரவு கணேசனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த அவர், அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கணேசன், விமலா, காயத்ரி ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர்.

Police station

இது குறித்து உடனே கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மகள் காயத்ரி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வந்ததாலும், பெற்றோருக்கு உடல்நலக்குறைவு காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கதவை பூட்டிக் கொண்டு வீட்டிற்குள் 3 பேரும் கடந்த 21-ஆம் தேதி கேக்கில் விஷத்தை தடவி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.