தமிழ்நாடு

எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு - தகாத நட்பால் ஏற்பட்ட விபரீதம் காரணமா?

webteam

தூத்துக்குடியில் பல ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசி நெருக்கமான நட்பில் இருந்த பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கவிதா. கடந்த 2017 ஆம் ஆண்டு கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பெருமாள் கவிதாவை விவாகரத்து செய்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் கவிதாவுக்கு தூத்துக்குடியை சேர்ந்த எட்வினுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவிதாவை தூத்துக்குடிக்கு அழைத்து வந்த எட்வின், குமரன் நகரில் வீடு பார்த்து குடிவைத்தார். கவிதா முத்தையா புரத்தில் அக்கவுண்டன்ட் வேலைக்கு செல்ல எட்வின் ஐஸ் கம்பெனியில் வேலைக்கு சென்றார்.

கடந்த 8ஆம் தேதி கவிதா மாயமானதாகக் கூறப்படுகிறது. அவரை எட்வின் தேடி வந்த நிலையில், உடல் கருகிய நிலையில் கவிதா விவேகானந்தா நகரில் உள்ள ஒரு வீட்டில் சடலமாக கிடந்தார். தகவலறிந்த தாளமுத்து நகர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கவிதா தனது 2 வது கணவர் எட்வினை பிரிந்து ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமியுடன் மூன்றாவதாக குடித்தனம் நடத்தி வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

கருப்பசாமியை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளார். கவிதா வேலை பார்த்த இடத்தில் பல ஆண் நண்பர்களுடன் நெருக்கமான நட்பை வைத்திருந்ததாகவும், அவர்களிடம் எல்லாம் தனது செல்போன் நம்பரை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த எட்வின் கவிதாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது. 

இந்த நிலையில் கடந்த 8ந்தேதி இரவு பணிக்கு சென்ற பின்னர் கருப்பசாமிக்கு போன் செய்த கவிதா, அவரை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். தன்னை காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டதால், கவிதாவை அழைத்துக் கொண்டு விவேகானந்தா நகரில் தனி வீடு பார்த்து குடிவைத்ததாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் இருவரும் அந்த வீட்டில் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர், 10 ந்தேதி இரவு இருவரும் தனிமையில் இருந்த போது அடுத்தடுத்து கவிதாவுக்கு போன் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளன.

ஒரு கட்டத்தில் ஒரு அழைப்பில் பேசியவருடன் சற்று நீண்ட நேரம் கவிதா மெல்லிய குரலில் உரையாடியதை கண்டு கடும் கோபம் அடைந்த கருப்பசாமி, அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து ஆவேசமாக வெளியேறியதாக போலீசில் கருப்பசாமி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அப்படியென்றால் கவிதாவை தீவைத்து எரித்தது யார் ? என்று தெரியாமல் காவல்துறையினர் குழம்பி போயுள்ளனர். கருப்பசாமி, எட்வின் ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.