உயிரிழந்த சசிகலா
உயிரிழந்த சசிகலா file image
தமிழ்நாடு

கடைக்கு சீல் வைத்த அரசு அதிகாரிகள்.. அதிர்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - நடந்தது என்ன?

PT WEB

தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு பகுதியில் வசித்து வருபவர் செல்லபாண்டியன். இவர் காய்கறி மற்றும் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இன்று காலை இவரது கடைக்கு வழக்கம்போல பலசரக்குகள் வந்திறங்கி உள்ளன. அப்போது அங்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறி கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகள் பேசிக்கொள்வதை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். வீடியோவின்படி அதிகாரிகள் செல்லப்பாண்டியனிடம் "மார்க்கெட் அருகே ரோட்டை இரண்டாகப் பிரித்து இருக்கிறீர்கள்.. சூப்பர் மார்க்கெட் அருகே உள்ள ரோட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டியதுதானே..” என ஆவேசமாகப் பேசுவதாக தெரிகிறது.

தூத்துக்குடி சீல் வைக்கப்படி கடை

அப்போது அங்கிருந்த வியாபாரி ஒருவர், "வண்டி நின்றதுக்குலாம் கடைக்கு சீல் வைத்தால் எப்படி?” என கேட்டுள்ளார். அதற்குப் பதில் கூறிய பெண் மாநகராட்சி அலுவலர் ஒருவர், "நாங்கள் அவர்கள் சொன்னதையே கேட்கிறோம். நாங்கள் வெறும் அம்புதான். ஏவியவர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்” எனக் கூறுகிறார்.

இது தொடர்பாகப் பேசிய வியாபாரிகள், "போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் இவ்வாறு செயல்படுகின்றனர்" என ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.

கடைக்கு சீல் வைக்கும் மாநகராட்சி அலுவலர்கள்

இதனையடுத்து சீல் வைக்கப்பட்ட கடையின் உரிமையாளர் செல்லபாண்டியன் தனது மனைவிக்கு போன் மூலம் தகவல் நடந்ததை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அவரது மனைவி சசிகலா (40) அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்தே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.