தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நபர், பிணையில் விடுதலையான சில நாட்களிலேயே மீண்டும் ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தற்போது மீண்டும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகர சம்பவம், நீதிமன்றத்தின் பிணை வழங்கும் கொள்கைகள் குறித்து சங்கடமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் சாதாரணக் குற்றவாளி அல்ல. 2020இல் கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர். 2025 டிசம்பரில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஏற்கெனவே சிறையிலிருந்த காலம், தர்ம முனீஸ்வரனின் மேல்முறையீட்டு மனுவில் விவாதிக்கப்பட வேண்டிய சட்ட அம்சங்கள் இருப்பது மற்றும் மேல்முறையீட்டு விசாரணை தாமதமாகும் என்பது போன்ற காரணங்கள் அவருக்குப் பிணை வழங்கப்படுவதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டன. தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.
ஆனால், சிறையிலிருந்து வெளியேறிய சில நாட்களிலேயே ஓர் இருசக்கர வாகனத்தைத் திருடி, பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகத் தர்மமுனீஸ்வரன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 400க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பைக் திருடப்பட்டதையும், அதில் தர்மமுனீஸ்வரனுக்கு உள்ள தொடர்பையும் போலீஸார் கண்டுபிடித்தனர். நிபந்தனை ஜாமீனில் அவர் கையெழுத்திட வந்தபோதே அடுத்த குற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம், ’பிணை என்பது பொதுவான உரிமை, சிறை என்பது விதிவிலக்கு’ என்ற சட்டக் கோட்பாடு, இத்தகைய கொடூரக் குற்ற வழக்குகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மிக முக்கியமாக, நீதிமன்றங்கள் இந்தக் கொள்கையை எல்லா இடங்களிலும் ஒரே சீராகப் பின்பற்றுகின்றனவா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், சமூகப் பாதுகாப்பையும் நீதிமன்றங்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் எனச் சட்ட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த கொடிய குற்றம் குறித்த பொதுமக்களின் கொந்தளிப்பிற்கு இடையே, நீதித்துறையின் பொறுப்புக்கூறல் மற்றும் செயல்பாட்டுச் சீர்மை குறித்த விவாதத்தில் இந்த வழக்கு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.