தமிழ்நாடு

மின் பகிர்மான அலுவலகத்திலே மின் ஊழியர் வெட்டிப் படுகொலை - தூத்துக்குடியில் பரபரப்பு

kaleelrahman

ஸ்ரீவைகுண்டம் அருகே மின் பகிர்மான அலுவலகத்தில் மின் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே நாசரேத்தில் மின்பகிர்மான அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஐந்து பேர் பணி சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை பணிக்காக மின்பாதை ஆய்வாளரான திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகரைச் சேர்ந்த ஆனந்த பாண்டி என்பவர் பணியில் இருந்துள்ளார்.

இதையடுத்து பணியில் இருப்பவர்கள் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த மின் கணக்கீட்டை எடுப்பார்கள் அதேபோல் நேற்றிரவு 12 மணி வரை இவர் இந்த மின் கணக்கை எடுத்துள்ளார். அதன் பின்னர் கணக்கு எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பணி மாற்றத்திற்காக வந்த நபர் அலுவலகத்தில் வந்து பார்த்தபோது ஆனந்த பாண்டியன் உடலில் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து அவர் நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து உயிரிழந்த ஆனந்த பாண்டி உடலில் ஏழு இடங்களில் வெட்டு காயங்கள் இருப்பதால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், முன்விரோதம் காரணமாக அவரை வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.