தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களும் சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அடுத்தகட்ட நடவடிக்கையாக சிபிஐ அதிகாரி சரவணன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கினர். தூத்துக்குடி சிப்காட், வடபாகம் மற்றும் தென்பாகம் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் சேகரித்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், தனிப்பட்ட முறையில் அளிக்கப்படும் புகார்கள் மீது சிபிஐ வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியிருந்தது.
இதன் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் சிபிஐக்கு அளித்த புகாரின் அடிப்படையில் காவல்,வருவாய் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னையில் இருக்கும் சிபிஐ அதிகாரி ரவி இதனை விசாரிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.