கூட்டத்தில் ஆவேசமாக பேசிய உறுப்பினர்
கூட்டத்தில் ஆவேசமாக பேசிய உறுப்பினர் pt web
தமிழ்நாடு

“என் மக்களுக்காக என் தாலியைக்கூட கழற்றித்தருகிறேன்” உணர்ச்சிவசப்பட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்!

PT WEB

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தினசரி சந்தை கடைகள் இடித்த போது அதில் பழுதடைந்த பொருட்கள் ஏலம் விடுவது, நகராட்சிக்குட்பட்ட கட்டணக் கழிப்பிடம் டெண்டர், நகராட்சியோடு 7 ஊராட்சி இணைத்து விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

அப்போது பேசிய 22 வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி, “எனது வார்டில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். போதிய நிதி இல்லாத காரணத்தால் அப்பணி தொய்வடைந்து உள்ளது. குடிநீர் பிரச்னையை தீர்க்க நிதி இல்லையென்றால் எனது வார்டு மக்களுக்காக என் தாலி செயினை கூட கழற்றி தர தயாராக இருக்கிறேன்” என் மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

கூட்டத்தில் ஆவேசமாக பேசிய உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி

இதையடுத்து பேசிய நகர்மன்ற தலைவர் கருணாநிதி, “இப்படி உணர்ச்சிவசப்பட்டு தவறுதலாக பேசக்கூடாது” என அறிவுரை வழங்கி சாலை மற்றும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.