தூத்துக்குடியில் திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு எஸ்பி அலுவலகத்தில் 10 மணி நேரம் விசாரணை நடந்தது. ஊடகங்கள் அருகே செல்லத் தடை செய்யப்பட்டதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர். மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லும் போது விசாரணை அதிகாரி துப்பாக்கி முனையில் மிரட்டியதாக எம்.எல்.ஏ கூறினார். காட்சிகளை பதிவு செய்ய முயன்ற ஊடகத்துறையினரை தள்ளி தாக்கியதுடன், ஏடிஎஸ்பி திபு பத்திரிகையாளரை நோக்கி நாக்கைத் துருத்தி மிரட்டிய வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்துறையினரை எஸ்பி அலுவலகத்திற்கு அருகே செல்ல அனுமதிக்காமல், சுமார் 100 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தியதாகவும், மார்க்கண்டேயனை படம் பிடிக்கவும், அவரிடம் கருத்து கேட்கவும் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டதாகவும் பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.
பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக மார்க்கண்டேயனை அழைத்து வந்தபோது, "விசாரணை அதிகாரி துப்பாக்கி முனையில் மிரட்டினார்" என்று அவர் ஊடகங்களிடம் பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
அந்த காட்சிகளை பதிவு செய்ய முயன்ற ஊடகத்துறையினரை காவல்துறையினர் தள்ளிவிட்டு தாக்கியதுடன், அங்கிருந்த ஏடிஎஸ்பி திபு பத்திரிகையாளரை நோக்கி நாக்கைத் துருத்தி மிரட்டும் விதமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.