தமிழ்நாடு

தூத்துக்குடி: வீட்டின் வெளியே படுத்திருந்த லாரி டிரைவர் கழுத்தறுத்துக் கொலை

kaleelrahman

ஓட்டப்பிடாரம் அருகே வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த லாரி டிரைவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பேரூரணி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (36). கடந்த 3 மாதங்களாக லாரி ஓட்டும் வேலை பார்த்து வந்த இவர், நேற்று ஊருக்கு திரும்பியுள்ளார். இவருக்கு திருமணமாகி கனகலெட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு குடும்பத்தினருடன் உணவருந்திய கருப்பசாமி, வீட்டின் வெளியே படுத்துத் தூங்கியுள்ளார். இதையடுத்து நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகமாக கேட்டதால் கருப்பசாமியின் மனைவி கனகலெட்சுமி வெளியே வந்து பார்த்துள்ளார்.

ஆப்போது கருப்பசாமி கழுத்தறுபட்டு, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தட்டப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்த சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த தட்டப்பாறை போலீசார், கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.