தமிழ்நாடு

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்

webteam

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் சொந்தமான கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவர் இன்று காலை இடிந்து விழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது தியாகராஜர் கோயில். இந்த கோயிலுக்கு ஐந்து வேலி நிலப்பரப்பில் எதிரே அமையப்பெற்றுள்ளது கமலாலயக் குளம். நேற்று இரவு திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக அந்த குளத்தின் தென்கரையில் அமையப்பெற்றுள்ள சுற்றுச்சுவர் சுமார் 100 அடி நீளம் உள்வாங்கி குளத்துக்குள் விழுந்துவிட்டது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு வடகரையில் இதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் நள்ளிரவில் சுமார் ஐந்து சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை பெய்தது. இதனால்தான் இந்த சுற்று சுவர் பாதிப்படைந்து வலுவிழந்து குளத்திற்குள் விழுந்துள்ளது. சுவர் விழுந்தத்தை தொடர்ந்து தற்போது தெற்கு கரையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களை வேறு வழியாக திருப்பி அனுப்புகிறார்கள். நகராட்சி ஊழியர்களும் போக்குவரத்து காவலர்களுக்கு உதவியாக அங்கு நின்று பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தென் கரையில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவர் அருகில் இருந்த மின் கம்பங்கள் பழுதடைந்து நன்றாக சாய்ந்து உள்ளன. இதனால் அந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின் ஊழியர்கள் கம்பங்களை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்