4 இளைஞர்கள் கைது
4 இளைஞர்கள் கைது புதியதலைமுறை
தமிழ்நாடு

திருவாரூர் - அரசுப்பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய அரசு கல்லூரி மாணவர்கள் நால்வர் கைது!

PT WEB

செய்தியாளர் - மாதவன்

------

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து தண்டலச்சேரி பகுதி வழியாக திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு நேற்று முன்தினம் அரசு பேருந்தை ஓட்டுநர் மகேந்திரன் என்பவர் இயக்கி வந்துள்ளார். தண்டலச்சேரி பகுதியில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள், திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருந்து அப்பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது அவர்கள் போதையில் இருந்துள்ளனர்.

பேருந்து திருக்கொள்ளிக்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது ஏற்கெனவே போதையில் இருந்த அக்கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணித்தவாறு ஒருவருக்கொருவர் தகாத வார்த்தையால் பேசிக்கொண்டது, பயணிகளுக்கு அருவருக்கும் வகையில் இருந்துள்ளது. அத்தோடு இம்மாணவர்களின் ஒழுங்கினமான செயலால், சக மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியது.

அப்போது பேருந்து நடத்துனர் பக்கிரிசாமி (51) மாணவர்களின் ஒழுங்கினமான செயலை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அம்மாணவர்கள், நடத்துனரை கீழே தள்ளிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பேருந்தில் இருந்து கீழே விழுந்த நடத்துனர் பக்கிரிசாமி மூக்கு உடைந்து அங்கேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் சேர்ந்து நடத்துனர் பக்கிரிசாமியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து பேருந்து நடத்துனர் பக்கிரிசாமி அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை தேடிவந்தனர். மேலும் பேருந்து நடத்துனரை அரசு கல்லூரி மாணவர்கள் தாக்கிய வீடியோ படகாட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், வைரலான வீடியோவை ஆதாரமாக வைத்து சம்பவத்தில் தொடர்புடைய சுர்ஜித்சிங் பர்னாலா, முருகதாஸ், பிரயதரன், மணிகண்டன் ஆகிய நான்கு அரசு கல்லூரி மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.