தமிழ்நாடு

திருவாரூர்: மதுபானக்கடை ஊழியரை பாட்டிலால் குத்திய கும்பல்

kaleelrahman

திருத்துறைப்பூண்டி அருகே 5 பேர் கொண்ட கும்பல் மதுக்கடையில் கடனாக மது கேட்டு தர மறுத்த ஊழியரை பாட்டிலால் குத்தியதில் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மாங்குடி கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், கடனாக மது கேட்டு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கடனாக மது தரமுடியாது என ஊழியர் கூறியதை அடுத்து கடையில் இருந்த மது பாட்டில்களை சேதப்படுத்திய கும்பல், ஊழியர்கள் சூரியமூர்த்தி, ராமச்சந்திரன் ஆகிய இருவரையும், மதுபாட்டில்களை உடைத்து குத்தியுள்ளனர்.

இதில் ஊழியர் சூரியமூர்த்திக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.